வியாழன், 18 மே, 2017

# நெருப்பின் காதல்கள் #
வியர்வையின் வாசத்திற்கு
இரவு பகல் வித்தியாசம் காட்டுகிறாய்.
பகலில் உழைப்பின் வாசம்.
இரவில் ஊடலின் வாசம்.
கோழிகளின் கொக்கரிப்புக்கு
கோலமே போட்டுக் காட்டும் உனக்கு - இந்த
காளியின் கத்தல்களில் உள்ள
காதல் தெரியாதா என்ன?
வார்த்தைகளின் நிறம் உறிஞ்சி
வாசலில் விட்டெறிகிறாய் - அது
வண்ணங்களில் குளித்தெழுந்து
வாசல் திறக்கும் போதெல்லாம்
வானவில்லாகி சிரிக்கிறது.
நீ பேசாத வார்த்தைகளை எல்லாம்
மெளனம் தன் மொழியாக்கி கொண்டது.
கவிதையோ? காவியமோ?
பெயர் வைப்பது உன் பாடு
ஏரிக்கரை ஆல மரம் நீ
கரை தாண்டி கிளை விரித்து
நீர் தாண்டி வேர் வளர்த்து
கம்பீரமாய் நிற்கிறாய்
கூடடையும் ஆவலுடன் வருகிறேன்.
உன் நினைவுகளை சுமந்தபடி.
விலாங்கு மீனென்று
பாம்புக் கறி தந்தவன் தானே,
தண்ணீருக்குள் நானழுகிறேன்.
மீன்களுக்கு கண்ணீர் துடைக்கிறாய்.
அடேய் சரவணா ...........
நெருப்புக்குச்சி உன்னை
என்னில் ஒரு முறை நனைத்துக்கொண்டேன்.
தீப்பெட்டி நான் - இப்போது
எரிந்து கொண்டிருக்கிறேன்.
நெருப்பு சுடாத காயங்களுடன்
கவிதாயினி எழில்விழி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக