வியாழன், 18 மே, 2017

# அன்பு #
வரையறைக்குள் சிக்காத
வார்த்தைகளின் வனப்பு.
மூளையின் முனைகளில்
வேரோடும் அமைப்பு .
மூளை தாண்டி வரும் போது
விற்பனை பொருளாவதில்
இனியும் இல்லை வியப்பு.
பிரபஞ்ச உணர்ச்சிகளின்
முதல் பெரும் பரிமாணம்.
பின்னொரு நாளில்
பண்டமாற்றாகி
பரிணாமம் ஆனதில்
கிடைத்ததொரு அவமானம்.
ரொட்டிக்கு வாலாட்டும் நாயின் அன்பு
கல்லால் அடிபடும் வரையில் தான்.
மகுடிக்கு ஆடும் பாம்பின் அன்பு
மயிலின் பார்வையில் படும் வரைதான்.
முதுமையின் கவனிப்புக்கு
இளமையில் சேமிக்கப்படும்
பொருளின் பெயர் தான்
பெற்றவர் அன்பு.
கட்டிலறை கதவுக்குள்
கண்மூடி தூங்கவும்
கட்டிக் கொண்டு தூங்கவும்
காட்டப்படுவதே கணவன் மனைவி அன்பு.
சார்பில்லாத அன்பென்பது
சாத்தியமில்லாத ஒன்று.
ஆகாயத்திற்கு நிலத்தின் மீது அன்பில்லை.
நிலத்திற்கு நீரின் மீது அன்பில்லை.
கடலுக்கு அலை மீது அன்பில்லை.
அலைக்கு காற்று மீது அன்பில்லை.
காற்றுக்கு மரம் மீது அன்பில்லை
மரத்துக்கு மழை மீது அன்பில்லை.
மழைக்கு நிலம் மீது அன்பில்லை.
இதையெல்லாம் எண்ணும் போது
இருப்பதன் பெயரே அன்பில்லை.
அழகான வார்த்தையில்
சொல்லப்போனால்
" அன்னை " க்கும் அன்பில்லை.
அட, அந்த ஆண்டவனுக்கும் அன்பில்லை.
அன்னையின் அன்புக்கு பின்
ஆங்கில " மதம் " இருந்தது.
ஆண்டவன் அன்புக்கு பின்
இந்திய " மதம் " இருந்தது.
பிரதிபலன் இல்லாத அன்பு
சாத்தானுக்கும் கூட
சத்தியமாய் கிடையாது.
எல்லாவற்றின் மீதும்
எனக்கு அன்புண்டு
என்பவரெல்லாம் வாருங்கள்.
உண்மை சொல்லும் நேரமிது
உறங்காமல் கேளுங்கள்.
உங்கள் உயிரின் மீதில்
உங்கள் பற்றுதலின்
பண்டமாற்றுதலின்
பவித்திரமான பெயர்தான் அன்பு.
காதலில் அன்பில்லை - அது
காமம் என்னும் பண்டமாற்று.
பிள்ளை மீது அன்பில்லை - அது
முதுமை பாதுகாப்பின் பண்டமாற்று.
குடும்பம் மீது அன்பில்லை. - அது
சமூக பெயர் தேடலின் சரியான பண்டமாற்று.
உலகின் பிரதிபலன் பாராது
எல்லார் மீதும் எல்லாவற்றின் மீதும்
பாரபட்சமின்றி அன்பு செலுத்துவது
ஒன்றே ஒன்று. ஆனால் உன்னதமான ஒன்று.
யாருக்குமே பிடிக்காது. ஆனால்
அதற்கு நம்மை பிடிக்காமல் போகாது.
ஆமாம்.
சரவணனை கடைசி நாளில்
தனக்குள் வாங்கி மூடிக் கொண்டது.
என்னை விழுங்க அன்புடன் தன்னை
தயாராக வைத்திருப்பது.
மண்ணை வணங்கிடும் மயக்கத்துடன்
கவிதாயினி எழில் விழி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக