சனி, 5 ஆகஸ்ட், 2017

# சிறுமை கண்டு பொங்குவாய் #

(சூரியன் FM ல் வைரமுத்து அவர்கள் பிறந்த நாள் கவிதைப்போட்டிக்காக அனுப்பியது)

ஏ பாரதி ………..!
நீ வேறு "வா வா வா “ என்று அழைக்கிறாய்.
ஏறு போல் நடையினாய் வந்து விட்டோம்.
சிறுமையும் கண்டு விட்டோம் - ஆனால்
பொங்குவதுதான் எப்படியென்று புரியவில்லை.
சொல்லிச்சென்றிருக்கலாம் நீ !

வெண்மணிக்கும் பொங்கினோம்.
வேம்புக்கும் பொங்கினோம்.
மரபணு மாற்றம் மறுத்து
மாட்டுக்கும் பொங்கினோம்.

மாஞ்சோலைக்கும் பொங்கினோம்.
மாங்காய்க்கும் பொங்கினோம்.
நீதிக்கும் பொங்கினோம்.
நீதி மறுத்தும் பொங்கினோம்.

கச்சத்தீவு கடலுக்கும் பொங்கினோம்.
வாய்க்காலுக்கும் பொங்கினோம்.
நிர்பயாவுக்கும் பொங்கினோம்.
நந்தினிக்கும் பொங்கினோம்.

காதலுக்கும் பொங்கினோம்.
காமத்திற்கும் பொங்கினோம்.
கல்விக்கும் பொங்கினோம்.
கழிவறைக்கும் பொங்கினோம்.

லட்சியத்திற்கு பொங்கினோம்.
லஞ்சத்திற்கும் பொங்கினோம்.
ஆடையில் சிறிதென்றாலும் - அந்த
கோவணத்திற்கும் பொங்கினோம்.

முடிவில்
வயிற்றுக்கும் பொங்கினோம்
தின்று விட்டு தூங்கினோம்.

இனி, பாரதி ……….!
உன் மற்றுமொரு வரிக்காக
நாங்கள் பொங்க வேண்டும்.
அந்த நாள் அகிலத்தை
அப்படியே புரட்டிப்போடும்.
மெல்லத்தமிழினிச்சாகும்
நாள் நெருங்குகிறது.

அறம் பாடிய புலவர்கள் போய் விட்டார்கள்.
இன்று மறம் பாடும் புலவன் இருக்கிறான்.
" தமிழுக்கும் நிறம் உண்டு “ என்றவனவன்.
சிவப்பா? பச்சையா? வெள்ளையா?
என்பதைச்சொல்ல வில்லை.

" இன்னொரு தேசிய கீதம் "
எழுத்திலே வடித்தவன் அவன்.
தமிழுக்காக மற்றுமொரு தேசிய கீதம்
எழுதுவானவன்

அந்த கீதம் இசைக்கப்படும்  நாளில்
எங்கள்  கன்னித்தமிழின்  வாழ்நாளில்
இன்னும் சில யுகங்கள்  கூடும்.
எனவே,
அவனும், என் தமிழும் நீடூழி வாழி ……!!

கவிதாயினி எழில்விழி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக