வெள்ளி, 24 மார்ச், 2017

# நர்த்தனம். #
இதோ,
திரை விலகிற்று.
உறுத்தாத அலங்காரத்தில்
பறக்காத மயிலொன்று
அரங்கத்தில்
கால் பாவிற்று.
ஜதிகளுக்குள்
சிறைப்பட்ட
இந்த
நவீன நடனத்தின்
அரங்கேற்றத்திற்காக .
நட்டுவனார் இயல்பாக
தகிட தகிட தத் திரிகிட
ஆரம்பிக்க
மிருதங்கம் தொடர்ந்து
வழிமொழிய
ஆரம்பமாகியது
அடவுகளுக்குள்
அடைபட்டு
அந்த முதல்
குரு வணக்கம்.
உற்றுக் கவனியுங்கள்,
அவள் வலக்கை அபிநயம்
ஒரு சமர்ப்பணம் சொல்லும்.
இடக்கை அபிநயம்
ஒரு அஞ்சலி சொல்லும்.
சமர்ப்பணம்,
சுயம் தொலைத்த
தன் தகப்பன் - அந்த
பொம்மலாட்ட கலைஞனுக்கு,
அஞ்சலி,
அவன் கை விரலில் இருந்து
நழுவி காணாமல் போன - அந்த
பொம்மலாட்ட கலைக்கு ......
கவிதாயினி எழில்விழி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக